தொண்டாமுத்தூர்,மார்ச்6:கோவையை அடுத்த சோமையம்பாளையம் ஊராட்சியில் நேற்று கலெக்டர் பவன்குமார் ஆய்வு மேற்கொண்டார். அரசின் நலத்திட்ட பணிகள்,ரேஷன் கடை,ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சோமையம்பாளையம் ஊராட்சியின் முன்னாள் துணை தலைவர் ஆனந்தகுமார் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் அடிவாரத்தில் பொம்மை கடைகள்,இளநீர் கடை, டீக்கடை,உணவகம் என பல்வேறு கடைகளை ஆண்டுதோறும் ஏலம் விடுவதன் மூலம் ஒரு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும். இதில்60 சதவீதம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கும், 40 சதவீதம் மருதமலை தேவஸ்தானத்திற்கும் பிரித்து அளிக்கப்படும். கடைகளின் ஏலம் கடந்த 28ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2025 -2026ம் நிதியாண்டிற்கான ஏலம் இதுவரை விடப்படவில்லை.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மருதமலை கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. எனவே பக்த்ாகளுக்கு இடையூறாக உள்ள கடைகளை ஏலம் விடாமல், மீதி உள்ள கடைகளையும், டூவீலர்,கார் நிறுத்தும் வண்டிபேட்டை பகுதியான பார்க்கிங் பகுதியை ஏலம் விட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.