கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
கோவை, வடவள்ளியை சேர்ந்தவர் விவேக் 31, கோவை, தனியார் கம்பெனியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதை சரி செய்ய இவரது நண்பர்களிடம், கால் வலிக்கு தீர்வு கேட்டுள்ளார். அப்போது, அவரின் நண்பர் ஒருவர், பிந்து என்பவரின் மொபைல்போன் எண்ணை கொடுத்து, ஆயுர்வேத மசாஜ் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளுங்கள் கூறியுள்ளார்.
உடனடியாக, பிந்துவை தொடர்பு கொண்ட போது, வெளியூரில் இருப்பதாகாவும், கிணத்துக்கடவு பொன்மலை நகரில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்றால், அங்கு இருப்பவர்கள், கவனித்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கிணத்துக்கடவு பொன்மலை நகருக்கு வந்த விவேக், பிந்துவுக்கு போன் செய்துள்ளார். அதன்பின், மசாஜ் சென்டரில் இருந்த பெண்கள் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவேக், ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து வருவதாக கூறி வெளியேறி, கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். அங்கு சென்ற போலீசார், விபச்சாரத்தில் ஈடுபட்ட இரு பெண்களிடமும் விசாரணை செய்தனர்.
விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், மசாஜ் சென்டர் நடத்துவதற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் இரு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவது தெரியவந்தது. போலீசார் இரு பெண்களையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பிந்துவை தேடி வருகின்றனர்.