போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்களுக்கு ‘பூட்டு’

0
88

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து விதிமீறிய 10 வாகனங்களுக்கு ‘பூட்டு’ போட்டு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

போக்குவரத்து நெருக்கடி

பொள்ளாச்சி நகரில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தினமும் போக்குவரத்து நெருக்கடியில் வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர். பொள்ளாச்சி சுற்றுலா சார்ந்த பகுதி என்பதால் தினமும் சுமார் 50 ஆயிரம் வாகனங்கள் பொள்ளாச்சி வழியாக சென்று வருவதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கேரளாவிற்கு ஏராளமான கனரக வாகனங்களும் பொள்ளாச்சி வழியாக சென்று வருகின்றன. இதனால் முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்களில் பொள்ளாச்சி நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இதற்கிடையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க நகரில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால் சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

வாகனங்களுக்கு ‘பூட்டு’

இந்த நிலையில் போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு ‘பூட்டு’ போடும் திட்டத்தை அமல்படுத்த பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு தீப சுஜிதா உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் காந்தி சிலை, உடுமலை ரோடு, பஸ் நிலையம், நியூஸ்கீம் ரோடு உள்பட நகரில் முக்கிய சாலைகளில் உள்ள இடங்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ‘பூட்டு’ போட்டனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

அபராதம்

நகரில் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விதிமுறைகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டு போடும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 10 வாகனங்களுக்கு பூட்டு போடப்பட்டது. மேலும் சுமார் 40 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.200 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து விதிமுறையை மீறினால் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பொதுமக்கள் விதிமுறையை கடைபிடித்து போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.