பயங்கரவாதிகள் 5 பேர் வீடு இடித்து தரைமட்டம்; காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி

0
3

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கினர்.

கடந்த 22ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தளபதி உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர். அந்த வகையில், ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் ஷாஹித் வீடு இடிக்கப்பட்டன.

இவர் 4 ஆண்டுகளாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குல்காமில் மற்றொரு தீவிர பயங்கரவாதி வீடு இடிக்கப்பட்டது. ஏற்கனவே, ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில், தோகர், அனந்த்நாக் மாவட்டம்; ஷேக், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.