நீர்நிலைகளில் குப்பை கொட்டினால் அபராதம் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

0
7

வால்பாறை: வால்பாறையில் உள்ள, நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும், என, நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகள் தனியார் எஸ்டேட் பகுதியாக இருப்பதால், அங்கு நகராட்சி சார்பில் குப்பை அள்ளப்படுவதில்லை.

வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுநகர், அட்டகட்டி, காடம்பாறை ஆகிய பகுதிகளில் மட்டும், நகராட்சி சார்பில் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், வால்பாறை நகரில் வெளியாகும் குப்பையை, ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள திறந்தவெளி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியும் படிப்படியாக நடந்து வருகிறது. இதனிடையே, வால்பாறை நகரில் உள்ள வீடு மற்றும் கடைகளில் நாள் தோறும் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் நேரடியாக சென்று சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை அண்ணாநகர் முதல் வாழைத்தோட்டம் டோபி காலனி வரையிலும், காமராஜ்நகர் முதல் சிறுவர்பூங்கா வரையிலும் உள்ள ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை ஆற்றில் நேரடியாக கொட்டுகின்றனர்.

சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, இந்த ஆறுகளில் குப்பைகள் கொட்டப்படுவதால், நீர்நிலைகள் மாசுபடுகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கிறது.

இது குறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணி வேகமாக நடக்கிறது. இதனையடுத்து, நகரில் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை நகராட்சி துாய்மை பணியாளர்கள், நாள் தோறும் காலை நேரத்தில் வீடுகளில் நேரடியாக சேகரிக்கின்றனர்.

ஆனால், ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள், வீடுகளில் வெளியாகும் கழிவுகளை ஆற்றில் வீசுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாகிறது. ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குப்பை கொட்டினால், இனி உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.

குறிப்பாக, நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் திறந்தவெளியில் குப்பை கொட்டாமல், திட்டகழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.