பொள்ளாச்சி; அரசு பள்ளிகளில், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் கண்டறியப்படும் நிலையில், அவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் சிலர், தயாராகி வருகின்றனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு முடிவுகள், மே மாதம் வெளியாகவும் உள்ளது. அவ்வகையில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், சிறந்து விளங்கும் மாணவர்கள் கண்டறியப்படுகின்றனர்.
அவர்கள், ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில், உரிய பயிற்சி அளிக்க, ஆசிரியர்கள் சிலர், தயாராகி வருகின்றனர். அவரவர் சொந்த செலவில், போட்டித்தேர்வு புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது: கிராமங்களில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழ்மை மாணவர்கள், படிப்பில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள், பொதுத்தேர்வை எதிர்கொள்ளத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டது.
அவர்களும், அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் வகையில், சிறந்த முறையில் தேர்வை எதிர்கொள்ளவும் உள்ளனர். அவர்களில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு, ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி அளிக்க, ஆசிரியர்கள் சிலர் முன் வந்துள்ளனர்.
போட்டித்தேர்வு புத்தகம் மற்றும் மாதிரி வினாத்தாள் தருவித்து, பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அவர்களின் மருத்துவப் படிப்பு கனவு நனவாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.