தேர்வெழுதும் மாணவர்களிடம் ‘தன்னம்பிக்கை விதை’; பெற்றோர், ஆசிரியர்கள் கரம் கோர்த்தால் சாத்தியம்

0
30

கோவை; மாணவர்களிடம் தேர்வு பயம், எதிர்மறை எண்ணங்களை போக்கி, தன்னம்பிக்கை விதைப்பதில் பெற்றோர், ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்கின்றனர் உளவியல் ஆலோசகர்கள்.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்துவரும் நிலையில், 10ம் வகுப்புக்கு வரும், 28 முதல் ஏப்., 15ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில், 10ம் வகுப்பு தேர்வை முதல் முறை எழுதுபவர்களுக்கு தேர்வு பயம், குழப்பம் இருக்க வாய்ப்புகள் மிக அதிகம்.

இச்சூழலில், ஆசிரியர்கள், பெற்றோரும் கைகோர்த்து, மாணவர்களை வழிநடத்தினால், பாதிப்புகளில் இருந்து வெளியேறி தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்ள வழிவகுக்கும் என்கின்றனர் உளவியல் ஆலோசகர்கள்.

முடியும் என்ற நம்பிக்கை!

தமிழ்நாடு உளவியல் சங்க தலைவர் பாலமுருகன் கூறியதாவது:

பொதுத் தேர்வு சமயத்தில் மாணவர்களிடம் தேர்வு பயம், ஆர்வமின்மை போன்ற மன நலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது. தேர்வு என்பது யாரையும் தோல்வி அடைவதற்காக வைக்கப்படுவதில்லை. மாறாக மாணவர்களின் திறன், அறிவை பரிசோதிக்க நடத்தப்படுகிறது.

முதலில் ‘என்னால் நன்றாக தேர்வெழுத முடியும்’ என்று நம்புங்கள். 24 மணி நேரத்தில், துாங்க ஏழு மணி நேரம், தயாராக, உணவு உண்ண, ஓய்வுக்கு என, தலா இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டாலும், படிப்பதற்கு மீதம், 11 மணி நேரம் இருக்கிறது.

தேர்வுக்கு முதல் நாள் புதிய பகுதிகளை படிப்பதை தவிர்த்தல் நல்லது. மாணவர் தேர்வு சிறப்பாக எழுதுவதில் பெற்றோர், ஆசிரியர் பங்கு உள்ளது. தேர்வில் வெற்றிபெற தன்னம்பிக்கை அளிக்க வேண்டும்.

தேர்வுசார் எதிர்மறை எண்ணங்களை குழந்தைகளிடம் களைய வேண்டும்.

பிற மாணவர்களுடன் குழந்தைகளை ஒப்பிடக்கூடாது; பாராட்ட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது இருந்தால், உடற்பயிற்சி மீண்டும் உற்சாகப்படுத்தும். விறுவிறுப்பான நடைபயிற்சி, நடனம், நீச்சல், குறுகிய துாரம் சைக்கிள் ஓட்டுதல், யோகா மேற்கொள்ளலாம். ஆரோக்கிய உணவு உண்பதால் தேர்வு சமயத்தில் நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்; ஆரோக்கியமாக தேர்வு எழுதலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.