பொள்ளாச்சி ; தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில், கொப்பரை, தேங்காய் விலை எதிர்பார்ப்பை விட உயர்ந்து உச்சத்தை அடைந்துள்ளது. நோய், வெள்ளை ஈ தாக்குதல் போன்ற காரணங்களால், தேங்காய் உற்பத்தி பாதியாக குறைந்த சூழலில், முழு பலனை விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மற்ற சாகுபடிகளை விட தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், சாகுபடி செய்யப்படும் தேங்காய், கொப்பரை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. கொப்பரை தரம் பிரிக்கப்பட்டு, விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தவித்து வருகின்றனர். மேலும், வறட்சி, வாடல்நோய் மற்றும் வெள்ளை ஈ தாக்குதல் போன்ற காரணங்களால் தென்னை விவசாயிகள் மீளாத்துயரில் உள்ளனர்.
தற்போது, கொப்பரை, தேங்காய் விலை உயர்ந்தாலும், விவசாயிகள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேங்காய் உற்பத்தி சீசன் துவங்கினாலும், பல்வேறு காரணங்களினால் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தேங்காய், கொப்பரை விலை வேகமாக உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது.
கொப்பரை உலர்களங்கள், ஐந்தாயிரத்துக்கும் மேல் இருந்தும், கடந்த, ஏழு மாதங்களாக அவை மூடப்பட்டுள்ளன; கொப்பரை உற்பத்தியே இல்லை.இதனால், வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று வேறு வேலைக்கு செல்கின்றனர். தற்போது சீசன் துவங்கினாலும், மீண்டும் தொழிலாளர்களை பிடித்து உற்பத்தியை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விலை உயர்ந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் ‘சிண்டிகேட்’ அமைத்து விலையை குறைத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பலரும் கொப்பரை உற்பத்தியை துவங்க முன்வருவதில்லை. கடந்த முறை நஷ்டத்தை சந்தித்ததால், உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
அரசு கொள்முதல் செய்த கொப்பரையை விற்பனை செய்ய வேண்டாம். ஜன., பிப்., மார்ச் மாதங்களில் விற்பனை செய்தால் பயனாக இருக்கும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு, ஒரு கிலோ, 80 – 90 ரூபாய்க்கு விற்றது. இதை வாங்கிய வியாபாரிகள் பதுக்கி வைத்தனர். தற்போது, தேங்காய், கொப்பரை விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அதனை விற்று அதிக லாபம் பார்த்துள்ளனர்.
தற்போது, ஒரு கிலோ கொப்பரை சாதா, 170 ரூபாய், ஸ்பெஷல், 175 ரூபாய், கறுப்பு தேங்காய், ஒரு டன், 66 ஆயிரம் ரூபாய், பச்சை தேங்காய், 58 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஒரு டின் (15 கிலோ) தேங்காய் எண்ணெய், 3,700 ரூபாய், ஒரு கிலோ பவுடர், 255 ரூபாயாக உள்ளது. மேலும், கொப்பரை, 180 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கொப்பரை உற்பத்தியாளர் சங்க பிரதிநிதி தங்கவேலு கூறுகையில், ”கடந்தாண்டை காட்டிலும் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளது. நோய் தாக்குதல், வறட்சி போன்ற காரணங்களினால், தென்னையில், 60 சதவீதம் மட்டுமே உற்பத்தி இருக்கும். தற்போது விலை உயர்ந்தாலும் முழு பலனை விவசாயிகள் பெற முடியாத சூழலே உள்ளது.
நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.
ஆலோசனை தேவையில்லை!
தென்னையில் வேர் வாடல் நோய், வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் போன்ற நோய் தாக்குதல்களால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கு தீர்வு கிடைக்காத என்ற வேதனையில் உள்ள விவசாயிகளுக்கு, தமிழக அரசின் பட்ஜெட்டும் ஏமாற்றத்தையே தந்தது.பட்ஜெட்டில், எந்தவொரு புது திட்டமும் இல்லை; நோய்களை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை கூட அரசு மேற்கொள்ளவில்லை. நோய் வந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என சொல்வதற்கு அதிகாரிகள் ஆலோசனை தேவையில்லை. பலன் கொடுக்காவிட்டால் அந்த மரங்களை வெட்டி சாய்த்து தான் ஆக வேண்டும்.எனவே, மரங்களை வெட்டுவதற்கு ஆலோசனை தருவதற்கு பதிலாக, மாற்று மருந்துகளை கண்டறிந்து தென்னை விவசாயத்தை காக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும், என, விவசாயிகள் தரப்பில் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.