தொண்டாமுத்தூர்: தியானத்தின் மூலம் மனம் என்னும் அதிசயத்தை, அனைவரும்உணர வேண்டும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
ஐ.நா.,சபை அறிவிப்பின்படி, முதலாம் ஆண்டு சர்வதேச தியான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும், மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்றாக மனநல பாதிப்புகள் இருக்கின்றன. மனநோயின் பெருந்தொற்று உருவாகிக்கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கும் இந்த காலகட்டத்தில், மனநல உணர்ச்சியில் உறுதி மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான கருவியாக, தியானத்தை ஐ.நா., சபை அங்கீகரித்திருப்பது பாராட்டத்தக்கது.
மனிதர்களின் மனம் அதிசயமானது. ஆனால் துரதிஷ்டவசமாக பலர், அதனை துன்பத்தை உருவாக்கும் இயந்திரமாகவே உணர்கிறார்கள். இது ஏனென்றால், மனம் எனும் அதிசய தொழில்நுட்பத்தை சரியாக கையாளும் கருவிகளை, மக்களுக்கு கொடுக்கவில்லை.
தியானம் என்ற செயல் முறையின் மூலம், மனதை அதிசயமாக செயல்படும் வகையில் இயக்க கற்றுக் கொள்ள முடியும். அடுத்த ஆண்டு துவக்கத்தில், ‘மிராக்கிள் ஆப் தி மைண்ட்’ என்ற செயலியை வெளியிட இருக்கிறோம்.
இது, நீங்கள் எங்கு இருந்தாலும் செய்யக்கூடிய, எளிய தியான பயிற்சிகளை உங்களுக்கு வழங்கும். இதன்மூலம் அமைதி, ஆனந்தம் மற்றும் உற்சாகத்தை, உங்கள் வாழ்வில் கொண்டு வர முடியும். பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும், மனம் என்னும் அதிசயத்தை உணர்ந்திட வேண்டும்.
டிச.,21ம் தேதியை, இதற்கு தேர்ந்தெடுத்து இருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ஏனென்றால், இது குளிர்கால கதிர் திருப்ப நாள் அல்லது உத்தராயண காலத்தின் துவக்கம்.
உலகிற்கு மாற்றத்திற்கான கருவிகளை எடுத்து செல்வதில், பாரதம் மீண்டும் முன்னணியில் இருப்பது அற்புதமானது. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான மனிதர்களின் தலைமுறையை உருவாக்குவதில், இது மிகவும் முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க படியாகும்.
இவ்வாறு, சத்குரு கூறியுள்ளார்