பொள்ளாச்சி; தமிழகத்தில், 1,197 பேருக்கு மத்திய அரசின், ‘இன்ஸ்பையர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, பள்ளி மாணவர்களுக்கு, ‘இன்ஸ்பையர்’ விருது வழங்குகிறது. இந்த விருது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
இன்ஸ்பையர் விருது பெறும் மாணவர்கள், அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும். கண்டுபிடிப்புகளை மாவட்ட அளவில் காட்சிப்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறுவோர் மாநில போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவர்.
மாநில அளவிலான, ‘இன்ஸ்பையர்’ விருது பெற, நாட்டில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளும் பங்கேற்கலாம். முதல் பரிசு பெறும் கட்டுரை மற்றும் படைப்புக்கு, 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
அதன்படி, 2024 -25ம் ஆண்டுக்கான, ‘இன்ஸ்பையர்’ விருது, தமிழகத்தில், 1,197 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 25 பேருக்கும், பொள்ளாச்சி பகுதியில், 11 பேருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அதில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி தமிழரசிக்கு இன்ஸ்பையர் விருது (புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது) வழங்கப்பட்டுள்ளது.
வெற்றி பெற்ற மாணவிக்கு, பள்ளி தலைமையாசிரியர், கணேசன் மற்றும் ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் சார்மிளா, வெள்ளியங்கிரி ஆகியோர் பாராட்டினர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
‘இன்ஸ்பையர் விருது’க்கு அறிவியல் கண்டுபிடிப்புக்கான விளக்கம், சுருக்கம் ஆன்லைன் வாயிலாக அனுப்பப்படும். அதை வைத்து படைப்புகள் தேர்வு செய்யப்படும். அதன்பின் வழங்கப்படும் பணத்தை கொண்டு, படைப்பு தயார் செய்து, மாவட்ட அளவிலான கண்காட்சியில் வைக்கப்படும்.
தற்போது, தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவியின் வங்கி கணக்கில், 10 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்; சான்றிதழும் வழங்கப்படும். இதை கொண்டு மாணவியின் கண்டுபிடிப்பான மருத்துவ முன்னெச்சரிக்கை கருவி (மெடிக்கல் அலர்ட் டிடெக்டர்) உபகரணங்கள் செய்து மாவட்ட அளவிலான கண்காட்சியில் காட்சிப்படுத்தி விளக்க வேண்டும்.
மாணவி தயாரித்த மெடிக்கல் அலர்ட் கருவி, ‘முதியோர்கள், மாத்திரை, மருந்துகளை சரியான நேரத்துக்கு உட்கொள்வதற்கு, ‘அலர்ட்’ செய்ய உதவுகிறது. தனியாக அவர்கள் நடந்து செல்லும் போது, கீழே விழுந்தாலோ, அசம்பாவிதம் நடந்தாலோ, அந்த டிவைஸில் இணைக்கப்பட்ட மொபைல்போன் எண்ணுக்கு தகவல் சென்று விடும். மேலும், அவர்களது, லொக்கேஷனும் சென்று விடும். இந்த படைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.