ஜில்லா கலெக்டர்களா… பில் கலெக்டர்களா! மாநகராட்சி மத்திய மண்டல கூட்டத்தில் விமர்சனம்

0
6

கோவை; கோவை மாநகராட்சி மத்திய மண்டல கூட்டம், அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது; மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். உதவி கமிஷனர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார்.

அதன் விபரம்:

மண்டல தலைவர் மீனா

மத்திய மண்டல பில் கலெக்டர்கள், தங்கள் பணியை முறையாக செய்வதில்லை. ஜில்லா கலெக்டர்கள்போல் பணிபுரிகின்றனர். இறைச்சி கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால், அபராதம் விதிக்க வேண்டும். ‘ட்ரோன் சர்வே’ என்பது நல்ல திட்டம். ஒரு சில இடங்களில் தவறு நடந்திருக்கிறது என்பதற்காக முழுவதுமாக நிறுத்தக் கூடாது.

வளர்ச்சி பணிகள், திட்டங்கள் செயல்படுத்த மாநகராட்சிக்கு நிதி தேவை. இவ்வளவு நாட்களாக வரி ஏய்ப்பு செய்து கொண்டிருந்தனர். அதை கண்டுபிடித்து, வரி விதிக்கிறோம்.

உதவி கமிஷனர் செந்தில்குமரன்

நிதியாண்டு முடிய ஒரு மாதமே இருக்கிறது. அதற்குள் வரி வசூல் இலக்கை எட்ட வேண்டும். பில் கலெக்டர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், வார்டு விட்டு வார்டு மாற்றம் செய்யப்படுவர். தொடர்ந்து குற்றச்சாட்டு வந்தால் நடவடிக்கை எடுப்பது உறுதி. சூயஸ் நிறுவனத்தினர், வார்டுகளில் வேலை செய்வதற்கு முன், கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா

சூயஸ் நிறுவனத்தினர் குழி தோண்டினால் உடனடியாக பணி செய்வதில்லை. தோண்டிப் போட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டது. வார்டுக்குள் தெருவிளக்குகள் அதிகமாக அமைத்துத் தர வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடை தேவை. பில் கலெக்டர்கள் மக்களிடம் கனிவாக பேச வேண்டும். இறைச்சி கழிவுகளை ரோட்டில் வீசும் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வினியோகிக்க வேண்டும்.

ரேவதி, 62வது வார்டு

ஸ்ரீபதி நகருக்கு, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் குடிநீர் சப்ளையாகிறது; எஸ்.வி., நகருக்கு தண்ணீர் செல்வதில்லை. குடிநீர் வினியோகம் தொடர்பாக தகவல் தெரிவிப்பதில்லை. வால்வுகளில் லீக் காணப்படுகிறது.

ஜெயப்பிரதாதேவி, 64வது வார்டு

புலியகுளம், போலீஸ் கந்தசாமி லைன் வீதி, ராமநாதபுரம் சந்திப்பு வரை, மழை நீர் வடிகால் துார்வார வேண்டும் அல்லது புதுப்பித்துக் கட்ட வேண்டும். மழை பெய்யும்போது, ரோட்டில் தண்ணீர் செல்கிறது. பெரியார் காலனி மெயின் ரோட்டில் சூயஸ் குழாய் பதிக்க வேண்டும்; விரைவாக பணியை முடித்துக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, கவுன்சிலர்கள் பேசினர்.

7,500 நாய்களுக்கு அறுவை சிகிச்சை

தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஜிஷா பேசுகையில், ”தெருநாய்களை பிடிப்பது சவாலாக உள்ளது. போதிய ஆள் பலம் இல்லை. குடும்ப கட்டுப்பாடு செய்யும் மையத்தில் கட்டமைப்பு வசதி செய்து தர வேண்டும். கடந்தாண்டு டிசம்பர், நடப்பாண்டில் ஜனவரி என மாதத்துக்குரிய பில் தொகை ரூ.16 லட்சம் நிலுவையில் இருக்கிறது.கடந்த ஜூலை முதல் தற்போது வரை, 7,500 தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். பெண் நாய்களை பிடித்து, அறுவை சிகிச்சை செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். தெருநாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில், மத்திய மண்டலம் முன்மாதிரியாக மாற்றப்படும்,” என்றார்.