ஜாலி கொண்டாட்டத்தில் போதை கும்பல்! காலி மதுபாட்டிலை உடைத்து வீசும் அவலம்

0
5

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் நள்ளிரவு நேரத்தில் மது அருந்தும் கும்பல் காலி மது பாட்டில்களை உடைத்து, அங்கு மழை நீர் வழிந்து ஓடும் துளைகளில் போட்டு அடைத்து செல்கின்றனர்.

கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையத்தில், 115 கோடி ரூபாய் செலவில், ஆண்டு நிதி திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், இரண்டு பக்கங்களிலும் மின்விளக்குகள் இதுவரை அமைக்கப்படவில்லை.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ‘குடி’மகன்கள், மேம்பாலத்தில் இரவு நேரத்தில் காரை நிறுத்தி, பார்க்கிங் விளக்குகளை எரியவிட்டு, மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில், காலி மது பாட்டில்களை உடைத்து பாலத்தின் ஓரத்தில், மழை தண்ணீர் செல்ல அமைக்கப்பட்டுள்ள துளையில் போட்டு நிரப்பி விடுகின்றனர்.

மழை அதிக அளவு பெய்யும்போது பாலத்தில் உள்ள துளை அடைக்கப்பட்டு, மழை நீர் வெள்ளமாக மேம்பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘இரவு நேரத்தில் பாலத்தில் போக்குவரத்து குறைவாக இருக்கும் என்பதால், திறந்தவெளி ‘பார்’ ஆக பயன்படுத்தி வருகின்றனர். சிலர், காரை பாலத்தில் நிறுத்தி, மது அருந்துகின்றனர். போலீசார் பாலத்துக்கு கீழ் உள்ள பகுதியில் மட்டுமே இரவு நேரத்தில் ரோந்து செல்கின்றனர். பாலத்தின் மேல் பகுதியில் கார்களை நிறுத்திக் கொண்டு, மது அருந்தும் நபர்களை கண்காணிப்பதில்லை.

மேலும், அந்த வழியாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்களால், போதையில் இருக்கும் அவர்களை கேள்வி கேட்க முடிவதில்லை. எனவே, போலீசார் பாலத்தின் மேல் பகுதியிலும், இரவு நேரத்தில் கட்டாயம் ரோந்து செல்ல வேண்டும்’ என்றனர்.