கோவை : ஜன்சதாப்தி ரயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்பட்டு, நேற்று செயல்பாட்டுக்கு வந்ததை, பயணிகள் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
கோவை – மயிலாடுதுறை – கோவை இடையே, ஜன் சதாப்தி விரைவு ரயில், தமிழகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 21 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வரும், பழமையான ரயில் இது. கட்டணம் குறைவு என்பதால் ஏராளமான பயணிகள், இந்த ரயிலில் பயணித்து வருகின்றனர்.
முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட இந்த ரயிலில் ஏ.சி., இருக்கை வசதி, மற்றும் இரண்டாம் வகுப்பு இருக்கை ஆகிய இரு பிரிவுகளில், இருக்கைகள் உள்ளன.
கும்பகோணம், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு செல்ல இந்த ரயில் உதவியாக உள்ளது. இந்த ரயில், ‘லிங்க் ஹாப்மேன் புஷ்'(எல்.எச்.பி.,) பெட்டிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இப்பெட்டிகள் விசாலமானவை என்பதால், பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க முடியும். அதிக நிலைத்தன்மை, வேகத்துக்காக இப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில், கோவையில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. இதை வரவேற்கும் விதமாக பயணிகள், பொதுமக்கள் கேக் வெட்டி கொண்டாடினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.