கோவை; காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா சாலையிலுள்ள மத்திய சிறைசாலை வளாகத்தில் நடந்துவரும் செம்மொழிப்பூங்கா மற்றும் பெரியார் நுாலக கட்டுமானப்பணிகளை, நேற்று கலெக்டர் பவன்குமார் ஆய்வு செய்தார்.
கோவை மத்திய சிறை மைதானத்தில், 45 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா அமைகிறது. முதல் கட்டத்தில் உள்ள, 45 ஏக்கரில் 25 ஏக்கருக்கு 23 வகை தனித்துவமான தோட்டங்கள் அமைகிறது.
இதில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து, 60,000 மரக்கன்றுகள் பெறப்பட்டுள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடைந்த இடங்களில், செடிகள் நடப்பட்டு வருகிறது.
20 ஏக்கர் நிலத்தில் 1,000 சதுர அடியில் உலக தரம் கொண்ட பல்நோக்கு மாநாட்டு மையம், திறந்தவெளி அரங்கம், 300 கார்கள் நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி, செயற்கை நீரூற்று என மற்றும் சில கட்டமைப்புகள் உருவாகின்றன. பணிகள் 75 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளது
செம்மொழி பூங்கா வளாகத்தில் மழைநீர் வடிகால், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு குழாய்கள் மற்றும் கூடுதல் மேம்பாட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
தரை தள வாகன நிறுத்துமிடம், 17,007.91 சதுர மீட்டர் பரப்பளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 380 நான்கு சக்கர வாகனங்களும், 10 பஸ்கள் நிறுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பணிகளை நேற்று கலெக்டர் பவன்குமார் பார்வையிட்டார். பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, அவருடன் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாநகராட்சி பொறியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள், தாசில்தார்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.