பாலுமகேந்திராவிடம் பயிற்சியுடன் நடிப்பு வாழ்க்கையை துவங்கியவர் கண்ணா ரவி. வீரா படத்தில் அறிமுகம், கைதி திரைப்படத்தில் பேசும் கதாபாத்திரம், தொடர்ந்து மண்டேலா, சாணி காகிதம், குருதி ஆட்டம், காதலன் என, தமிழ் திரையுலகில் தனது தடத்தை பதித்தவர்.
கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கண்ணா ரவியிடம் ஒரு சின்ன சந்திப்பு…
இளம் தலைமுறையினருக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது?
திறமை உள்ள அனைவருக்கும், அதை நிரூபிப்பதற்கான தளம் நிறையவே உள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்கள், குறும்படங்கள் உள்ளன. ஆனால், இன்னும் தொழில் ரீதியான மார்க்கெட் சற்று பிரச்னையாகவே உள்ளது.
திறமையுள்ள ஒருவர் மீது, பணம் முதலீடு செய்ய யாராவது வேண்டும். அது தான் இங்கு பலருக்கு கிடைக்காமல் உள்ளது. கதை, இயக்குனர் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கும். தற்போது ஹீரோவை அடிப்படையாக கொண்ட களமாக இருப்பதால், அதன் அடிப்படையிலேயே திரைப்படங்கள் உள்ளன.
தமிழ் திரையுலகம் எதை நோக்கி சென்று கொண்டுள்ளது?
சரியான பாதையில் செல்கிறது. நல்ல கதைகள் இன்று பிரமாண்ட வெற்றியை பெறுகின்றன. பெரிய நடிகர்களுக்கு விளம்பரமே தேவையில்லை. ரசிகர்கள் நல்ல படங்களை வரவேற்கின்றனர். சமூக வலைதளங்கள் இருக்கும் காலத்தில் அதிகளவில் விமர்சனங்கள் வருகின்றன. இது இன்று தரமில்லாத நிலையையே அடைந்துள்ளது.
அதனால், ரசிகர்களும் எதை தேர்வு செய்வது என்ற குழப்பத்துக்கு ஆளாகின்றனர். திணிக்கப்பட்டு பார்க்கும் படங்கள் தான் அதிகம். சுமாராக படம் செய்தாலும் அதை விளம்பரப்படுத்துகின்றனர். அதேசமயம் நல்ல கதை உள்ள படங்கள், விளம்பரம் செய்யப்படாததால் வெற்றி பெறுவதில்லை.
திரைப்படங்களுக்கான விமர்சனங்கள் முறையற்று உள்ளதா?
அப்படியில்லை. விமர்சனங்களே இல்லாத பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ஒரு படத்தை பார்த்து விட்டு அதன் பின் விமர்சனம் எழுதுவது தான் முறையாக இருந்தது. ஆனால், இன்று அப்படியில்லை. இதனால், படங்கள் கேலியாக பார்க்கப்படுகிறது. இத்துறையில் இருப்பவர்களின் தரம் குறைந்துள்ளது. விமர்சனம் செய்பவர்கள் சினிமா குறித்து தெரிந்து, கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
திறமைகள் குவிந்து கிடக்கும் தமிழ் திரையுலகுக்கு, ஆஸ்கர் இன்னும் கனவாகவே உள்ளதே?
எனக்கு விருதுகள் மீது பெரிய உடன்பாடு இல்லை. ஒரு குழு தான் விருதுக்கான படங்களை தேர்வு செய்கிறது. அதைவிட நம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்கள் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறுகிறது. அதுதான் உலக சினிமா. ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவில் வெற்றி பெறும் படம் தான் சிறந்த ஒன்று.
புதிதாக வரும் கலைஞர்களுக்கு பொறுமை எவ்வளவு தேவை?
சினிமா அவர்களது ஆசையா அல்லது வாழ்க்கையா என தீர்மானிக்க வேண்டும். எந்த ஒரு விசயத்தையும் மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். இது தான் எனக்கு பிடித்த ஒன்று என, உழைத்தால் வெற்றி பெறலாம். காலதாமதமாகும் போது நாம் எந்த திறனை வளர்க்க வேண்டும் என, யோசிக்க வேண்டும். அப்படி செய்தால் என்றாவது ஒருநாள், நினைத்தை இடத்தை அடையலாம்.