கோவை: அவினாசிலிங்கம் பல்கலையில், இறுதி ஆண்டு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மாணவிகளை கவுரவிக்கும் வகையில், விளக்கேற்றும் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர் சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கிரிஜா தாய் விளக்கேற்றி பேசுகையில், ”கல்வி என்பது வெறும் அறிவைப் பெறுவது மட்டுமல்ல. அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணம். அது, ஒருவரின் குணத்தை வடிவமைத்து, வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்தும்.
சவால்களை தடைகளாகக் கருதாமல், வெற்றிக்கான படிக்கட்டுகளாகக் கருதி, அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். மாணவிகள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் உலகில் நடக்க வேண்டும். அதே நேரத்தில் பணிவையும், கற்றுக்கொண்ட கருத்துகளில் நிலைத்திருக்கவும் வேண்டும்,” என்றார்.
முன்னதாக பல்கலை கலை, சமூக அறிவியல் பள்ளியின் டீன் ஷோபனா கொக்கடன் வரவேற்றார். பல்கலை வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் குருஞானாம்பிகா நன்றி தெரிவித்தார். இறுதியாண்டு பயிலும் இளநிலை, முதுநிலை மாணவியர், தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சிக் கல்வி மற்றும் பி.எச்டி., மாணவியர் என, மொத்தம், 2,213 பேர் விளக்கேற்றினர்.