கோவை; வரும் 16ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, கோவை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மைய தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு மாவட்டங்களில் வரும் 16ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. அறுவடை செய்த பயிரின் எச்சங்களைத் தீயிட்டு எரிப்பதைத் தவிர்க்கவும். அவற்றை வயல்வெளியில் மட்கச் செய்யவும்.
தென்னையில், ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் தென்படுகிறது. மஞ்சள் நிற ஒட்டுப் பொறியில் விளக்கெண்ணை தடவி, எக்டருக்கு 20 தாள்கள் வைக்கவும்.
ஒட்டுண்ணி இரை விழுங்கிகளை, தென்னை ஓலையில், ஸ்டேப்ளர் பயன்படுத்தி கட்டிவிடவும்.
எக்டருக்கு, 1,000 எண்ணிக்கையில், கிரிஸோபிட் முட்டைகளை அட்டைப்பெட்டிகளில் வைக்கவும். வேர்வாடல் நோய்க்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
மின்கம்பங்கள் மற்றும் மரங்களுக்கு அடியில் கால்நடைகளைக் கட்ட வேண்டாம். மழைக்கால நோய்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க, உள்ளூர் கால்நடை மருத்துவர்களை கலந்து ஆலோசிக்கவும். பருவ கால நோய்களுக்கு எதிராக, தடுப்பூசி போடவும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.