கோவை : கோவை அரசு மருத்துவமனையில், சலவை பணிக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என சுமார், 3,000 படுக்கைகள் உள்ளன.
இங்கு பயன்படுத்தப்படும், நோயாளிகள் பயன்படுத்திய மெத்தை விரிப்பு, தலையணை உறை அனைத்தும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள நீராவி சலவையகத்தில் சலவை செய்யப்படுகிறது.
தற்போதுள்ள நீராவி சலவை அமைப்பு, 1990ல் ஏற்படுத்தப்பட்டது.
கூடுதல் வசதி தேவை என்பதால், 2024ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய சலவை பிரிவு அமைக்க, அடிக்கல் நாட்டப்பட்டது. மூன்று மாடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,”சலவைக்காக புதிய கட்டடம் 2.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்,” என்றார்.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) செல்வராஜ் கூறுகையில், ”6,950 சதுரடியில் தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சலவை செய்யவும், அயர்ன் மற்றும் காயவைக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வந்ததும், பிற செயல்பாடுகள் மேற்கொண்டு பணிகள் முடிக்கப்படும்,” என்றார்.