கோவையில் 36 இடங்களில் சுவாமி திருமேனி சிலை பாதுகாப்புக்கு சிறப்பு மையங்கள்வந்தது வசதி

0
81

கோவை : இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில், சுவாமியின் உலோக திருமேனி சிலைகளை பாதுகாக்க, கோவையில் 36 இடங்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவையில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக, 3,000 கோவில்கள் உள்ளன. இவற்றில், பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் ஈட்டக்கூடிய, ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களின் எண்ணிக்கையே அதிகம்.

பட்டியல் வகையை சேர்ந்த, 367 கோவில்களில் தான், பக்தர்களின் எண்ணிக்கையும், வருவாயும் அதிகம்.

இக்கோவில்களுக்கு நன் செய் மற்றும் புன்செய் நிலங்களும், வணிகக் கட்டடங்களும், வர்த்தக ஸ்தாபனங்களும் நிறைய இருப்பதால், வருவாய்க்குக் குறைவில்லை.

நேர்த்திக்கடன்

இக்கோவில்களுக்கு வழிபாட்டுக்கும், நேர்த்திக்கடன் செலுத்தவும் வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனாக, தங்கம், வெள்ளித்தகடுகளில் தயாரிக்கப்படும் ஆபரணங்களை உண்டியலில் செலுத்துவர். உண்டியலில் செலுத்த முடியாத, ஆபரணங்கள் மற்றும் விக்ரஹங்களை கோவில் அலுவலகத்தில் செலுத்துவர்.

என்ன பொருள் செலுத்துகிறோம் என்று போட்டோ எடுத்து இணைத்து, கோவில் அலுவலகத்தில் சமர்ப்பித்து, அதற்கான ரசீதை பெற்றுக்கொள்வர். அந்த வகையில், சுவாமியின் உருவம் அடங்கிய உலோக திருமேனி சிலைகள், தங்கத்தாலான வேல், செங்கோல், சக்திவேல், தோடு, வெள்ளியிலான பாதம், கைகள், கால்கள், உடல், தலை என்று உண்டியலில் செலுத்த முடியாத பொருட்களும், வந்து சேருகின்றன.

இவை தவிர, சுவாமிக்கான கிரீடம், தங்கம், வெள்ளியிலான அங்கி ஆகியவற்றையும் பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர். இதுவே இறைவனுக்கு சமர்ப்பிக்க, காலம் காலமாக பக்தர்கள் பின்பற்றப்படும் நடைமுறை.

கொள்ளை புகார்கள்

இப்படி பக்தர்கள் நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கும், விலையுயர்ந்த பொருட்களை கோவில் ஊழியர்களே கையாடல் செய்வதாக, பரவலான புகார்கள் உள்ளன. அதேபோன்று, கோவில்களில் கொள்ளை போகும் சம்பவங்களும் நடக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், பக்தர்கள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக சமர்ப்பிக்கும் உலோக திருமேனி சிலைகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு கோவிலிலும், சிலை பாதுகாப்பு மையம் அமைக்க முடியாது.

அதனால் அருகருகே இருக்கும் கோவில்களை ஒருங்கிணைத்து, கோவையில் மட்டும், 36 உலோகதிருமேனி சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருட்டு தடுக்க அலாரம், அறைக்கு உள்ளே வெளியே சுழலும் கேமரா என்று, நவீன வசதிகளுடன் இம்மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: உலோக திருமேனி பாதுகாப்பு மையங்கள், அருகருகே உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கேமராக்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், இருந்த இடத்திலிருந்தே மையங்களை கண்காணிக்கலாம். இரவுக்காவலர்கள் இம்மையங்களில் இருப்பர்.

கோவை கோவில்களில் உள்ள, உலோகத்திருமேனி சிலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உலோகத்திருமேனி பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சேகரமாகும் சிலைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாதுகாப்பு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.