கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டம்; பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விளக்கம்

0
28

கோவை; பிரதமர் மோடி தலைமையில் நடந்த ‘வெபினார்’ கூட்டத்தில், கோவையில் செயல்படுத்தப்படும், 24 மணி நேர குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் விதம் தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விளக்கினார்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் மற்றும் சுகாதார வசதிகள் குறித்து, மற்ற உள்ளாட்சிகள் தெரிந்து கொள்ளும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் ‘வெபினார்’ கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த உயரதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து உள்ளாட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கோவை மாநகராட்சியில் இருந்து கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று, 24 மணி நேர குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக விளக்கினார்.

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கோவையில் மட்டுமே, 50 ஆயிரம் வீடுகளுக்கு, 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் எவ்வாறு நடைமுறப்படுத்தப்பட்டது; வீடுகளுக்கு எவ்வாறு சப்ளை செய்யப்படுகிறது; அதன் பயன்பாடு, அதன் தரம், என்னென்ன சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன; வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அமைத்துள்ள குழுக்கள் குறித்து, கமிஷனர் தெரிவித்தார்

இதுதொடர்பாக, கமிஷனரிடம் கேட்டபோது, ”ஒரு நகரத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தும் திட்டங்களின் சிறப்புகளை அறிந்து, மற்ற நகரங்களில் பின்பற்றுவதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. பட்ஜெட்டுக்கு பின், குடிநீர் மற்றும் சுகாதார திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்போது, எந்தெந்த நகரங்களுக்கு எத்தகைய பணிகள் தேவைப்படும் என்பதை அறிவதற்காக நடத்தப்பட்டது. கோவையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் தொடர்பாக மற்ற நகரங்களை சேர்ந்தவர்கள் அறிவதற்காக விளக்கினோம்,” என்றார்.