கோவையில் சி.பி .எஸ்.இ., பொதுத் தேர்வுகள் துவக்கம் 5,000 மாணவர்கள் பங்கேற்பு

0
29

கோவை: சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் நேற்று துவங்கியது. கோவையில், 29 மையங்களில் நடந்த தேர்வுகளில், சுமார் 5,000 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

கோவையில், 130 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 70 பள்ளிகளில் இருந்து, மாணவர்கள் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வை எதிர்கொண்டனர். பத்தாம் வகுப்பு மாணவர்கள் நேற்று ஆங்கிலத்தேர்வையும், பிளஸ்2 மாணவர்கள் திறன் பாடப்பிரிவான தொழில்முனைவோர் திறன் தாளையும் எழுதினர்.

பிளஸ்2 திறன் சார்ந்த எழுத்து தேர்வுகளே துவங்கியுள்ளதால், கோவையில் குறைவான மாணவர்களே இத்தேர்வை எழுதினர். பத்தாம் வகுப்பு மாணவர்களே அதிகளவில் தேர்வில் பங்கேற்றனர்.

தேர்வுகள், காலை, 10:30 மணிக்கு துவங்கி 1:30 மணி வரை நடந்தன. பிளஸ்2 பிரிவு மாணவர்களுக்கான முக்கிய தேர்வுகள், 21ம் தேதி முதல் துவங்கவுள்ளன. பத்தாம் வகுப்பு மாணவர்கள், அறிவியல் பாடத்தேர்வை, 20ம் தேதி எதிர்கொள்ளவுள்ளனர்.

ஆங்கில பாடத்தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரே கேள்வி மட்டும் சிலபஸ் தாண்டி கேட்கப்பட்டு இருந்ததாகவும், அதில் சாய்ஸ் இருந்ததால், சிக்கல் ஏதும் இல்லை எனவும் தெரிவித்தனர்.