கோவை; கோவை, காந்திபுரத்தில், செம்மொழி பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில், 6 ஏக்கர், 98 சென்ட் நிலத்தில், எட்டு தளங்களுடன் நுாலகம் அமைப்பதற்கான கட்டுமான பணியை, பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது.
கோவை, காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்க ஒதுக்கிய, மத்திய சிறைக்குச் சொந்தமான, 6 ஏக்கர், 98 சென்ட் நிலத்தில், 1.98 லட்சம் சதுரடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுவதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், நவ., 6ல் அடிக்கல் நட்டார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
நுாலகத்தின் தரைத்தளத்தில் ஆடிட்டோரியம் மற்றும் அறிவியல் மையம், முதல் தளத்தில் அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நுாலகம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான நுாலகம், மூன்றாம் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நுாலகம் மற்றும் தலைமை நுாலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, ஐந்தாம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஆறாம் தளத்தில் பருவ இதழ்கள் மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் டிஜிட்டல் நுாலகம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன
நான்கு இடங்களில் ‘லிப்ட்’ வசதி, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பேனல் அறை, குடிநீர் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதனால், கோவையின் புதிய அடையாளமாக, இந்நுாலகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.