கோடநாடு கொலை கொள்ளை வழக்கு; எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை

0
35

கோவை ; கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில், கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட, 10 பேரை கைது செய்தனர்.

மேலும், வழக்கு தொடர்பாக போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், கூடுதல் தகவல்களை பெறும் வகையில் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்,கோடநாடு வழக்கை விசாரித்த தனிப்படையில் இருந்த போலீசார் மகேஸ்குமார், விஜயகுமார், ரமேஷ்குமார், பசுபதி, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுரேஷ், கபீர், சங்கர் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதையடுத்து, கடந்தவாரம் சிறப்பு எஸ்.ஐ., மகேஸ்குமார், அ.தி.மு.க., பிரமுகர் சங்கரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கபீர், மின் வாரிய ஊழியர் சுரேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், எஸ்டேட் மேலாளர் நடராஜன் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஏ.டி.எஸ்.பி., முருகவேல் நேற்று விசாரணை நடத்தினார்.