கோவை; கோவை மாவட்ட பகுதிகளில், கொலை மற்றும் சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளதாக, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, குட்கா விற்பனை, சாலை விதிமீறல்கள், லாட்டரி விற்பனை, அடிதடி, கஞ்சா விற்பனை, சட்ட விரோத மது விற்பனை, சூதாட்டம், திருட்டு, வழிப்பறி, பாலியல் குற்றங்கள், சைபர் கிரைம் குற்றங்கள் என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டோர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு கொலை, சாலை விபத்து மரணங்கள் குறைந்துள்ளதாக, போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு ஜன., முதல் டிச., வரை மாவட்ட பகுதிகளில், 38 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, 45க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதேபோல், 2024ம் ஆண்டு நடந்த 2,598 சாலை விபத்துகளில், 687 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது 2023ம் ஆண்டை விட 8 சதவீதம் குறைவு. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட, 3,11,214 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து, ரூ.3 கோடியே 28 லட்சத்து, 68 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய, 5,392 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.72 லட்சத்து 90 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குட்கா வழக்குகள், லாட்டரி விற்பனை வழக்குகள், மதுவிலக்கு வழக்குகள், சைபர் கிரைம் உள்ளிட்ட வழக்குகள், 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
2024ம் ஆண்டு மட்டும், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன, திருட்டு போன சுமார் ரூ.1 கோடியே, 37 லட்சத்து, 15 ஆயிரம் மதிப்புள்ள 756 மொபைல் போன்கள் கண்டுபிடித்து, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இரு மடங்கு அதிகம்
பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 20 பேர், திருட்டு வழக்கில் தொடர்புடைய 18 பேர், கஞ்சா விற்பனை செய்த 21 பேர், சட்டம் ஒழுங்கு வழக்கில் 9 பேர், பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 5 பேர் என, 73 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட, இரு மடங்கு அதிகம்.