குத்தகைக்கு விடுவது ஊழலுக்கு வழிவகுக்கும்! நகராட்சி சார்பில் கடைகள் கட்ட வலியுறுத்தல்

0
6

பொள்ளாச்சி; ”பல கோடி மதிப்புள்ள நகராட்சி இடங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடும் திட்டத்தை கைவிட வேண்டும்; மாநகராட்சியாக மாறும் போது, அந்த இடங்கள் தேவைப்படும்,” என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தினார்.

பொள்ளாச்சி நகராட்சி இடங்களை குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்து, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நகராட்சி கமிஷனர் கணேசனுக்கு கடிதம் கொடுத்து வலியுறுத்தினார்.

அதில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி நகராட்சி தேர்நிலை தினசரி வியாபார சந்தையில், ஆண்டு குத்தகை அடிப்படையில், 35 கடைகள் பல ஆண்டுகளாக, ஏழை, எளிய மக்களுக்கு விடப்பட்டது. இந்த கடைகள் பழுதடைந்த நிலையில், நகராட்சி வாயிலாக கடைகள் புதுப்பிக்கப்பட்டு, ஏற்கனவே பல ஆண்டுகளாக அங்கு கடை நடத்தியவருக்கு மீண்டும் வழங்கப்படும் என அப்போதைய கமிஷனர் வாயிலாக உறுதியளிக்கப்பட்டது.

தற்போது, 56 கடைகள் கட்டப்பட்ட நிலையில், குத்தகை இனமாக ஒன்பது ஆண்டுகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி, தனியாருக்கு விட்டு குத்தகைதாரர் வாடகை வசூல் செய்யும் விதமாக தீர்மானம்

நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால், ஏற்கனவே பல ஆண்டுகளாக அங்கு கடை நடத்தியவர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.தனித்தனி கடைகளாக ஏலம் விடும்பட்சத்தில் நகராட்சிக்கு அதிக வருவாய் மற்றும் கோடிக்கணக்கில் வைப்புத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

தற்போது, மொத்த குத்தகைக்கு விடும் போது இது அதிக வருவாய் இழப்பை ஏற்படுத்தும். குத்தகை எடுக்கும் தனிநபரின் வளர்ச்சிக்கே உதவும். இதை மறு ஆய்வு செய்து அங்கு கடை நடத்தியவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், நகரில் பயன்படுத்தாமல் சுகாதாரமற்ற முறையிலும், கட்டடங்கள் சிதிலமடைந்தும் உள்ளநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், குத்தகை அடிப்படையில் ஒன்பது ஆண்டுகளுக்கு தனியாருக்கு பொது ஏலம் விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஊழலுக்கு வழிவகுக்கும் விதமாக உள்ளது.

நகராட்சி வாயிலாக அங்கு கடைகள் கட்டி வாடகைக்கு விடும்பட்சத்தில், நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். எனவே, நகராட்சியின் பயன்பாடற்ற நிலங்களை தனியாருக்கு விடும் தீர்மானத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

ஆ.சங்கம்பாளையத்தில், எம்.பி., தொகுதி நிதியில், அம்மா மண்டபம் கட்டப்பட்டது. தெற்கு ஒன்றிய அலுவலகமாக செயல்பட்ட இந்த மண்டபம், தற்போது நகராட்சிக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டது.

இதை புதுப்பிக்காமல் இருக்கும் நிலையிலேயே தனியாருக்கு குத்தகை விடுவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ரத்து செய்து, நகராட்சி வாயிலாக புதுப்பித்து ஏழை, எளிய மக்களுக்கு வாடகைக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும்!

எம்.எல்.ஏ., பேசுகையில், ”பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டு இணைப்பு கொடுக்க காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம் என்ன, இத்திட்டம் வீண் என மக்களிடம் பேச்சு உருவாகியுள்ளது. இத்திட்டத்தில் விரைந்து இணைப்பு வழங்க வேண்டும்,” என்றார்.மனுவை பெற்ற கமிஷனர், ”நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவின்படி தேர்நிலையம் மார்க்கெட் குத்தகைக்கு விட தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.”பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது, ரத்து செய்யப்பட்டு திருத்திய மதிப்பீடுடன் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விரைவில் வீட்டு இணைப்பு வழங்கப்படும்,” என்றார்.