கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

0
12

கோவில்பாளையம்; தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்தியும், மற்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைத்தும் அரசு முதன்மைச் செயலர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதில் கோவை மாநகராட்சியுடன் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கீரணத்தம் ஊராட்சி இணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கீரணத்தம் மக்கள் கூறுகையில், ‘இங்கு 1,000க்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் உள்ளனர். மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 1000 பேரும் வேலை இழப்பார்கள். இத்துடன் சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி அனைத்தும் அதிகரிக்கும். கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசுக்கும்

அனுப்பியுள்ளோம். ஆனால் அதன் பிறகும் அரசாணை வெளியிட்டது வருத்தத்துக்குரியது. இதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்,’ என்றனர்.

கீரணத்தம் ஊராட்சி தலைவர் பழனிச்சாமி கூறுகையில், இங்கு டைடல் பார்க் பகுதி மட்டுமே வளர்ச்சி அடைந்த பகுதி. மற்ற பகுதிகள் வளர்ச்சி குறைவாக உள்ளன. 1,425 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். ஊராட்சியாக தொடர வேண்டும் அல்லது பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், என்றார்.

கடும் அதிருப்தி

பல மாதங்களாகவே ஊரக உள்ளாட்சிகளை தரம் உயர்த்துவது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலம்பூர், சின்னியம்பாளையம், மயிலம் பட்டி ஆகிய ஊராட்சி மக்கள், தாங்கள் ஊராட்சியாகவே தொடர வேண்டும், மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என, விருப்பம் தெரிவித்தனர்.

கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றின. இதேபோல், அரசூர், கணியூர், பட்டணம் ஊராட்சி மக்கள், பேரூராட்சி யாக தரம் உயர்த்த வேண்டாம்; ஊராட்சியாகவே செயல்பட விருப்பம் தெரிவித்தனர். தீர்மானமும் நிறைவேற்றின. ஆனால் மக்களின் கருத்துக்கு எதிராக, அரசாணை வெளியிட்டு, ஊராட்சிகள் சிதைக்கப்பட்டுள்ளதாக, ஊராட்சி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை :

அரசின் இந்த அறிவிப்பு அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது. தங்களது விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப சில ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்துள்ளது.

இணைக்க வேண்டிய பேரூராட்சிகளை இணைக்கவில்லை. பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்கவில்லை. பாரபட்சமாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிகாரம் இருப்பது என்பதற்காக அறைக்குள்ளேயே ஆலோசித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒரு ஆணையத்தை அமைத்து மக்களிடம் கருத்து கேட்டு அறிவித்திருக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். அடுத்த கட்டமாக சட்டபூர்வ நடவடிக்கையும் தொடர உள்ளோம்.

அரசின் இந்த உத்தரவால் பல ஊராட்சி ஒன்றியங்கள் காணாமல் போகும். 100 நாள் வேலை திட்டத்தில் பலர் வேலை இழப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.