கோவை; தமிழகத்தில், வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை தற்போது குறைய துவங்கியுள்ளது. மேலும் வரத்து அதிரிக்கும் என்பதால், விவசாயிகள் நலன் கருதி, அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
மொத்த விலை நிலவரத்தின் படி, கோவையில் நேற்று பெரிய வெங்காயம் 30-35 ரூபாய், சின்ன வெங்காயம் 40-70 ரூபாய், பூண்டு 300-350 ரூபாய், முருங்கை 250 ரூபாய், காரட் 40 ரூபாய், முட்டைக்கோஸ் 15 ரூபாய், பீன்ஸ் 60 ரூபாய், ஊட்டி பீட்ரூட் 60 ரூபாய், உருளைகிழங்கு 30 ரூபாய், வெண்டை காய் மற்றும் புடலங்காய் 30 ரூபாய், பச்சை மிளகாய் 35 ரூபாய், கத்தரி 15 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவைக்கு கர்நாடகா, தமிழக மாவட்டங்கள், ஓசூர், மைசூர், ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி வரத்து உள்ளது. பெரிய வெங்காயம், தக்காளி விலை கடந்த சில நாட்கள் முன், விலை ஏற்றம் கண்ட நிலையில், தற்போது குறைந்து காணப்படுகிறது.
தியாகி குமரன் மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ”பல்வேறு பகுதிகளில் இருந்து, கோவைக்கு 1000 டன் காய்கறி வரத்து இருக்கும்.
உள்ளூர் தேவைக்கு போக, மீதம் மேட்டுப்பாளையம், ஊட்டி, கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெங்காயம், தக்காளி விலை குறைந்துள்ளது. அறுவடை நேரம் என்பதால், வரத்து அபரிமிதமாக இருக்கும்.
இதனால், விலை வீழ்ச்சி அடையும். விவசாயிகள் இதனால் பாதிக்காத வகையில், அரசு தற்போதே முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்,” என்றார்.
சந்தை விலை
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில், நேற்று கத்தரி 30-35 ரூபாய்க்கும், வெண்டை 45-50 ரூபாய்க்கும், தக்காளி 20-22 ரூபாய்க்கும், புடலை 34-38 ரூபாய்க்கும், பூசணி 15-18 ரூபாய்க்கும், சி.வெங்காயம் 65-70 ரூபாய்க்கும், பெ.வெங்காயம் 50-54 ரூபாய்க்கும், முருங்கை 180-200 ரூபாய்க்கும், தேங்காய் 54-58 ரூபாய்க்கும், கீரைகள் 20-25 ரூபாய்க்கும், உருளை 30-38 ரூபாய்க்கும், காரட் 50-54 ரூபாய்க்கும் விற்பனையானது.