கோவை : கோவை மாவட்ட நிர்வாக அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் காலாவதியான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு கார், ஜீப் போன்ற வாகனங்கள் அலுவலக பயன்பாட்டுக்காக வழங்கப்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளின் படி, 15 ஆண்டுகளுக்கு மேல் வாகனங்களை பயன்படுத்த இயலாது. இவ்வாகனங்கள், காலாவதி செய்ய அனுமதி பெற்று ஏலம் விடப்படுகிறது.
அரசு அலுவலகங்களில் காலாவதியான வாகனங்கள், ஆண்டுக்கணக்கில் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகின்றன. அவை உடனுக்குடன் ஏலம் விடப்பட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஆண்டுக்கணக்கில் தாமதிப்பதால், அதன் மதிப்பு முற்றிலும் போய் விடுகிறது.
வழக்கமாக, அரசு போக்குவரத்து பணிமனையில் வாகனம் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சென்னை போக்குவரத்து பணிமனைக்கு அனுப்பப்படும். அங்கு அனுமதி கிடைத்தவுடன், ஏலம் விடுவதற்கான பணிகள் துவக்கப்படும். காலாவதியான வாகனங்கள் உடனுக்குடன் ஏலம் விடப்பட்டால், ஒரு வாகனத்திற்கு, 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அரசு துறைக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆண்டுக்கணக்கில் தாமதம் செய்து பின்னர் விடுவதால், 5000 ரூபாய், 6000 ரூபாய் என ஒரு வாகனத்திற்குவிலை நிர்ணயிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை மட்டுமின்றி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள காலாவதியான வாகனங்களை ஏலம் விட மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோவை பொதுசுகாதாரத்துறை வளாகத்தில் மட்டும், கார், ஜீப், ஈச்சர் வாகனம், டிராக்டர் என 12 வாகனங்கள் இதுபோல் பாழாகும் நிலையில் ஆண்டுக்கணக்கில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையிலும் இதுபோன்ற வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ”வளாகத்தில் உள்ள வாகனங்களை கண்டம் செய்ய அறிக்கை சென்னை சுகாதாரத்துறைக்கான போக்குவரத்து பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதி கிடைத்ததும் அதனை மேற்கொள்வோம். இங்குள்ள சில வாகனங்கள் உணவு பாதுகாப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு காரணமாகவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது,” என்றார்.
காலாவதியான வாகனங்கள் மட்டுமின்றி, நல்ல பயன்பாட்டில் உள்ள வாகனங்களை முறையாக இயக்காமல் ஆண்டுக்கணக்கில் நிறுத்தி பாழாகும் நிலையும் அரசு அலுவலகங்களில் உள்ளது. உதாரணமாக, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மண்டல நடமாடும் உளவியல் வாகனம். பல அதிகாரிகள், துறைகளுக்கு வாகனங்கள் இல்லாத நிலையில், இதுபோன்று நிற்கும் வாகனங்களை சீரமைத்து பயன்படுத்த வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.