ஊராட்சிகளில் கொடுத்தால் தான் அனுமதி… காசு …துட்டு …பணம்! வரன் முறை திட்ட விண்ணப்பங்கள் தேக்கம்

0
4

சூலுார்: கோவை மாவட்ட ஊரக பகுதிகளில் மனை வரன் முறை கோரிய விண்ணப்பங்கள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தமிழக அரசின் நகர்புற ஊரமைப்பு துறை வழிகாட்டுதல் படி, கடந்த, 2016 அக்., 20க்கு பிறகு, முறையாக அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளை மட்டுமே விற்க முடியும்.

அதற்கு முன் கிரையம் செய்யப்பட்ட வீட்டு மனைகளை அதன் உரிமையாளர்கள், உரிய கட்டணங்களை செலுத்தி வரன்முறை படுத்திக்கொள்ள வேண்டும் என, அரசு அறிவித்தது.

அங்கீகாரம் இல்லாத மனைகள் பிரிக்கப்பட்டு விற்காமல் இருந்தால், மீண்டும் புதிய விதிமுறைகளை பின்பற்றி மறு சீரமைப்பு செய்த பின்னரே விற்க வேண்டும் எனவும் அரசு அறிவித்தது.

சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வரன்முறைக்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இந்த வாய்ப்பை பொதுமக்களும் பயன்படுத்தி கொண்டு, தங்கள் மனைகளை வரன்முறை படுத்தி கொண்டனர்.

இதுகுறித்த விபரம் அறியாதோர், அலட்சியமாக இருந்தோர் என, பலர் தங்கள் மனைகளை வரன்முறை படுத்திக்கொள்ளும் வாய்ப்பை தவற விட்டனர்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்கும் வரை, உரிமையாளர்கள் தங்கள் மனைகளை வரன்முறை படுத்திக்கொண்டனர். கடந்த, ஜன., மாதம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தது. தனி அலுவலர்களின் வசம் ஊராட்சி நிர்வாகங்கள் வந்தன.

இதையடுத்து, மனை வரன் முறைப்படுத்தும் விண்ணப்பங்கள் தேங்க துவங்கின. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வாயிலாக வளர்ச்சி கட்டணம், மனை அங்கீகார கட்டணம் ஆகியவற்றை வங்கி கணக்கில் செலுத்தி அங்கீகாரம் பெற வேண்டி உள்ளது.

உரிய கட்டணங்களை செலுத்தி, ஊராட்சி பகுதி மனை உரிமையாளர்கள் விண்ணப்பங்களை வழங்கினாலும் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஒன்றியத்தில் உள்ள அலுவலர்கள் சிலர், உயர் அதிகாரிகளை கவனிக்கவும், தங்களுக்காகவும், லஞ்சம் கேட்பதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன.

மனைகளின் பரப்பளவு, உரிமையாளர்களின் தகுதிக்கு ஏற்ப, 5 ஆயிரம் முதல் லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கிராம பகுதிகளில் வசிக்கும் நாங்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். சிறுக சிறுக சேமித்த பணத்தில், வீடு கட்ட முடிவு செய்தோம். மனை வரன்முறை செய்திருந்தால் தான், வீடு கட்டுவதற்கான அனுமதி பெறமுடியும்.

அதற்காக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். ஆனால், பல மாதங்களாகியும் உத்தரவு கிடைக்கவில்லை. என்ன காரணம் எனக்கேட்டாலும் முறையாக பதில் சொல்வதில்லை.

அலுவலர்கள் வைத்திருக்கும் இடைத்தரகர் மூலம் சென்றால், விண்ணப்பத்துக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு உடனடியாக வேலை நடக்கிறது. அனைத்து கட்டணங்களையும் வங்கி வழியே செலுத்தினாலும், சில அலுவலர்களிடம் பணம் கொடுத்தால் மட்டுமே காரியம் ஆகும் நிலை உள்ளது.

மாவட்ட நிர்வாகத்துக்கு இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட அளவில் ஆய்வு நடத்தி இப்பிரச்னைக்கு கலெக்டர் தான் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.