கோவை: கார்வேந்தன் எழுதி, கவின் பப்ளிகேஷன் சார்பில் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக உருவாகியிருக்கும், கொங்கு ரத்தினங்கள், கொங்கு மாமணிகள் என்ற இரு நூல்கள் வெளியீட்டு விழா, கோவையில் நேற்று நடந்தது.
பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் வெளியிட, சக்தி குழும நிறுவனங்களின் செயல் இயக்குநர் தரணிபதி ராஜ்குமார், செல்வம் ஏஜன்சீஸ் மேலாண் இயக்குநர் நந்தகுமார் பெற்றுக் கொண்டனர்.
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது
கொங்குப் பகுதியைப் போல, இயற்கையாகவே தொழில் கிளஸ்டர்கள் அமைந்த பகுதி உலகில் வேறெங்கும் இல்லை. கரூரில் துவங்கி, கோவை வரை அனைத்து விதமான தொழில்களும் வியாபித்து வளர்ந்திருக்கின்றன. அதே அளவுக்கு சிவாலயங்களும் நிறைந்த தேசம். கொங்கின் வளர்ச்சிக்குக் காரணம் ஆன்மிக நன்னெறி எனலாம்.
விவசாயம் ஆகட்டும், தொழிலாகட்டும், கோவிலுக்கு முதல் பங்கைக் கொடுப்போம். நம் மக்கள் கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்; அறம்சார்ந்த முதலீடுகளை மேற்கொண்டவர்கள்.
150 ஆண்டுகளாக இங்கிருந்த பெரியவர்கள், அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற மனப்பான்மையோடு தந்து சென்றவை அதிகம். கொங்குப் பகுதியைப் போல அறக்கட்டளைகள் வேறெங்கும் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார்.
கார்வேந்தன் ஏற்புரையாற்றினார். நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.