வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின், ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை மட்டுமே, பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.
இந்தாண்டு, கடந்த, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு முதலே, ஏராளமான பக்தர்கள் மலை ஏறினர். பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், மற்றும் கிரி மலையிலுள்ள சுயம்பு வடிவிலான ஈசனுக்கும், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, சுவாமியை தரிசித்தனர்.
நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போக்கு வரத்து கழகம் சார்பில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி தினமான நேற்று இரவு வரை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஈசனை வழிபட்டனர்.