இருக்கும் எம்.பி.,க்கள் என்ன செய்து விட்டார்கள்? காட்டமாக கேட்கிறார்கள் கோவை மக்கள்

0
7

தொ குதி மறுசீரமைப்பால் எம்.பி., தொகுதிகளில் மாற்றம் இப்போதைக்கு இல்லை என, மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்ட நிலையில், அது குறித்து தென்மாநில முதல்வர்கள், எம்.பி.,க்கள் பங்கேற்ற கூட்டம், தமிழக முதல்வர் தலைமையில் நேற்று நடந்தது. இது குறித்து, கோவை மக்கள் சிலரிடம் பேசினோம்

லோக்சபா தொகுதிகளை பா.ஜ., அரசு மறுசீரமைப்பு செய்யப்போவது, தமிழக அரசுக்கு தெரிந்து விட்டது. இதனால் தமிழகம் மற்றும் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் வந்து விட்டது. அதை தடுக்கத்தான் இந்த கூட்டம் நடக்கிறது.

– சரவணன் ஆட்டோ ஓட்டுனர்.

மறுசீரமைப்பு செய்தாலும், தொகுதி எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்க வாய்ப்பில்லை. குறைத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு வரும்.

– கவின்ராஜ் கல்லுாரி மாணவர்

இந்த கூட்டம் இப்போது தேவையில்லை. எம்.பி., எண்ணிக்கை குறைய வாய்ப்பு இல்லை. எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் நல்லது.

– கவுசல்யா தனியார் நிறுவன ஊழியர்

எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில், எம்.பி., தொகுதி எண்ணிக்கையை குறைக்கக் கூடாது. மக்கள் அதிகம் உள்ள மாநிலங்களில், எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

– ஜீவிதா தனியார் நிறுவன ஊழியர்

இத்தனை எம்.பி.,க்கள் இருந்து என்ன பிரயோஜனம். மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. அதிகமாகி என்ன ஆகப்போகிறது. இருக்கும் தொகுதி அப்படியே இருந்தால் போதும்.

-ராதா இல்லத்தரசி

சட்டசபை தேர்தல் வர இருப்பதால், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை பேசுகின்றனர். மறுசீரமைப்பு அறிவிப்பு வரும் முன் இந்த கூட்டம் தேவையில்லை. வந்தாலும் தொகுதி எண்ணிக்கை குறையாது.

– சண்முகம் துணி வியாபாரி

தொகுதி மறுசீராய்வு பற்றி, மத்திய அரசு எதுவும் சொல்லாத போது, இந்த கூட்டம் இப்போது தேவை இல்லை. நேர விரயம்தான். தொகுதி எண்ணிக்கையை மத்திய அரசு குறைக்காது.

-சந்துரு கல்லுாரி மாணவர்

தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு எந்த அறிவிப்பு செய்யவில்லை. ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பிறகு வர வாய்ப்புள்ளது. இப்போது கூட்டம் நடத்துவதால் எந்த பயனுமில்லை.

– விஷ்வலிங்கம் சுயதொழில்

தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. தொகுதி வரையறை செய்தால் மக்கள் தொகை அடிப்படையில், எம்.பி., தொகுதி எண்ணிக்கை நிச்சயம் குறையும்.

– ஹரி கல்லுாரி மாணவர்